(19 Mar 2010)கச்சேரி ஆரம்பம் படம் தெலுங்கில் வெளியிடப்படுகிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி கூறியது: 3 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் கச்சேரி ஆரம்பம் படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜீவா நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படம். எல்லா அம்சங்களும் கலந்த கமர்ஷியல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. 220 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளது. இதுவரை குடும்ப பட ரசிகர்களுக்காக சென்டிமென்ட் படங்களைத்தான் தயாரித்து வந்தோம். இப்போது அந்த டிரண்ட் மாறிவிட்டதால் நாங்களும் மாறிவிட்டோம். இதே படத்தை தெலுங்கிலும் வெளியிட இருக்கிறோம். அதில் வடிவேலு காமெடிக்கு பதில் பிரம்மானந்தம் காமெடியை இணைக்க இருக்கிறோம். இதற்காக ஐதராபாத்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.
(19 Mar 2010)அஞ்சாதே படத்துக்குப் பிறகு தமிழில் நரேனுக்கு படங்கள் எதுவும் இல்லை. மலையாள படத்துக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. ஆனால், இல்லை என்று மறுக்கிறார் நரேன். இதுகுறித்து நரேன் கூறியது: தமிழில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது உண்மைதான். பூக்கடை ரவியில் நடிக்கிறேன். இப்போது தம்பிக்கோட்டையில் நடித்து வருகிறேன். அதில் எனக்கு பூனம் பஜ்வா ஜோடியாக நடிக்கிறார். அக்காவாக மீனா நடிக்கிறார். மலையாளப் படங்களுக்கு நான் முக்கியத்துவம் தருவதாக சொல்வது தவறு. தமிழில் அதிகப் படங்களில் நடிப்பதற்காகவே, மலையாளத்தில் புதுப்படம் ஒப்புக்கொள்ளவில்லை. தம்பிக்கோட்டை படத்தில் அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களான பிரபு, மீனா, சங்கீதாவுடன் இணைந்து நடிக்கிறேன் என்றார் நரேன்.
(19 Mar 2010)மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு கால் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14-ந் தேதி திரைக்கு கொண்டு வரலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன். இப்படி அஸ்திரத்தை ஏவுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம் சிங்கம். சாண் ஏறினால் சாண் சறுக்குகிற நிலையில்தான் இருந்தார் விஜய். சமீபத்தில் வெளிவந்த அவரது படங்கள் இழுத்துக்கோ பறிச்சிக்கோ நிலையில்தான் வசூலை சந்தித்தது. இனிமேல் வைக்கிற ஒவ்வொரு அடியும் அதிரடியாக இருக்கணும் என்று முடிவெடுத்த விஜய், சுறாவின் றெக்கையை சாணை பிடித்துதான் வைத்திருக்கிறாராம். படத்தின் அத்தனை காட்சிகளும் செம ஷார்ப், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் உத்தரவாதம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். தனிக்காட்டு ராஜாவாக இருக்கும் என்று நேற்றுவரை நம்பிக் கொண்டிருந்த சிங்கம் படக்குழுவை இந்த செய்தி அதிர்ச்சியடைய வைத்திருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?
(19 Mar 2010)பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி குறித்து நேற்று சென்னையில் பரவிய பரபரப்பு வதந்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நடிகர் கவுண்டமணி சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் கவுண்டமணியின் மனைவி இதை உடனடியாக மறுத்தார். கழுத்து வலி காரணமாகவே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந் நிலையில் நேற்று காலை கவுண்டமணியின் உடல் நிலை குறித்து சென்னையில் புரளி பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், இதுவும் வதந்தி என்பது நிரூபணமாகியுள்ளது. அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என்று மருத்துமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(19 Mar 2010)எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் திரையிசையில் பொற்காலத்தை உருவாக்கிய பெருமைமிக்கவை இசைஞானியின் பாடல்கள். இந்தப் பாடல்களின் காபிரைட் உரிமை இளையராஜாவிடமே இருந்தாலும், விற்பனை உரிமை எக்கோ நிறுவனத்திடம் இருந்தது. அதாவது விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏதுமில்லாத காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தம். இன்று இசைத்தட்டு வடிவத்தைத் தாண்டி, சிடி, சிப், இன்டர்நெட், எஃப்எம், ரிங்டோன்ஸ் என பல பரிமாணங்களில் பணம் பார்க்கிறார்கள் அந்த இசையை வைத்து. இன்று வெறும் 10 ரூபாய்க்கு ஒரு எம்பி 3 சிடி கிடைக்கிறது. ஆனால் இசைஞானியின் அந்த பொற்காலப் பாடல்கள் அடங்கிய சிடிக்கு எக்கோ நிறுவனம் வைத்திருக்கும் விலை ரூ 200. அதுவும் 16 பாடல்கள்தான்! ஆனால் இதில் இளையராஜாவுக்கு நயா பைசா ராயல்டி கிடையாதாம். கண்ணெதிரே தனது இசையை வைத்து மாபெரும் கொள்ளை நடப்பதைப் பார்த்துப் பொறுக்காத ராஜா, தனது இசைக்கான காப்பிரைட் உரிமையை மொத்தமாக மலேஷிய நிறுவனத்துக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். ஆனாலும் எக்கோகாரர்கள் பிடிவாதமாக ராஜாவின் பழைய பாடல்களை சிடி அடித்து விற்று வருகிறார்கள். இதனால் கோபமடைந்த இளையராஜா, சட்டத்துறை வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, எக்கோ நிறுவனம் மீது புகார் தர முடிவு செய்தார். அதன்படி இன்று காலை சென்னை காவல்துறை ஆணையரைச் சந்தித்து எக்கோ நிறுவனம் மீது எழுத்து மூலம் புகார் அளித்துள்ளார். எக்கோ நிறுவனத்தின் உரிமையாளர் அமெரிக்காவில் வசிப்பவர். பெயர் பார்த்தசாரதி. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளிடமும் உரிமையாளரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது காவல்துறை.









