பாலிவுட்டில் காலூன்ற தனக்கு பெரிதும் உதவிய நடிகை ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் அசின். அசின் மும்பை பட உலகில் அறிமுகமானபோது யாரையும் தெரியாமல் தவித்தார். அப்போது ஸ்ரீதேவிதான் அவருக்கு வலிய வந்து உதவினார். தான் குடியிருக்கும் வீடு அருகிலேயே அவருக்கும் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார். தனது வீட்டிலேயே சமைத்து அசினுக்கு உணவுகளை அனுப்பி வைத்தாராம். இதை அசினே பல முறை மாய்ந்து மாய்ந்து சொல்லி வந்தார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஸ்ரீதேவி வீட்டில்தான் எப்போதும் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் அசின். தனது பாலிவுட் தொடர்புகளைப் பயன்படுத்தி அசினை பெரிய இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் அறிமுகப்படுத்தி வந்தார் ஸ்ரீதேவி. இப்படி நெருக்கமாக இருந்த அவர்களின் நட்பு இப்போது டமால் ஆகிவிட்டது. காரணம், ஸ்ரீதேவிக்கே 'கால்ஷீட் நஹி' என்று அசின் கூறியதே. 'நம்ம பொண்ணாச்சே, கேட்டதும் கொடுத்துவிடுவார் கால்ஷீட்டை' என்று நம்பி தாங்கள் தயாரிக்க உள்ள புதுப்படத்தில் கதாநாயகியாக நடிக்குமாறு அசினிடம் கால்ஷீட் கேட்டுள்ளார் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். ஆனால் எடுத்த எடுப்பில் அசின் மறுத்தது ஸ்ரீதேவி போனிகபூருக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டதாம். பாலிவுட்டில் இது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. தெரிந்தவர் படத்தில் நடித்தால் அதிக சம்பளம் கேட்க முடியாது என அசின் நினைத்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள். காரணம் இப்போது இந்தியில் ரெடி உள்ளிட்ட இரு படங்களில் மட்டும்தான் நடித்து வருகிறார் அசின். தமிழில் அவர் நடித்த காவலன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 'கால்ஷீட் காலியாக இருக்கும் போதே எதற்கு இந்த பிகு' என்று கிண்டலாகக் கேட்கிறார்கள் பாலிவுட் புள்ளிகள்! காசுக்கு வாலாட்டுறவங்க கால வாரி விட்டுருவாங்கனு அம்மணிக்கு, இப்ப நல்லா புரிஞ்சிருக்கும்!
நடிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யாவின் திருமணம் நாளை சென்னையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய பிரமுகர்களுக்கும் நேரில் சென்று திருமண அழைப்பிதழை கொடுத்தார் ரஜினிகாந்த். தனது ரசிகர்களை, தம் மகளின் திருமணத்திற்கு அழைக்காத ரஜினிகாந்த், இதற்காக வருத்தம் தெரிவித்து பத்திரிகைகளின் வழியாக ரசிகர்களுக்கு அவர் தனது கைப்பட எழுதி அனுப்பியுள்ள செய்தியின் விவரம்: "என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள், எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும், வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் தனது கைப்பட ரஜினிகாந்த் எழுதியுள்ளார். இதுதான் நாசுக்கான நழுவலோ....
பாலாவின் எல்லாப் படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடல் இருக்கும். சூப்பர் ஹிட் பாடல்களில் இருந்து சில வரிகளை எடுத்துப் போட்டு இந்த அல்வாவை கிண்டியிருப்பார் பாலா. பிதாமகன் படத்தில் வரும் சிம்ரனின் டான்சும் அந்தப் பாடலும் இன்னும் நினைவுகளில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பதை பலரும் ஒப்புக் கொள்வார்கள். தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அவன் இவன் படத்திலும் அப்படி ஒரு பாடலை வைத்திருக்கிறாராம் பாலா. சிம்ரன் மாதிரி இந்த படத்திலும் ஒரு முன்னணி நாயகியை ஆட வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை. அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா என்று அவரது மனக்கணக்கு வெவ்வேறு நடிகைகளை நோக்கி இருந்தாலும், வாய்ப்பை பறித்துச் செல்கிறவர் அநேகமாக தமன்னாவாகதான் இருக்கும் என்கிறார்கள். ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்ற கொள்கை வைத்திருக்கும் மேற்படி நடிகைகள் பாலாவுக்காக இந்த கொள்கையை குழி தோண்டி புதைக்கவும் தயாராக இருக்கிறார்களாம். ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் பொருத்தமானவராகவும் நெருக்கமானவராகவும் இருக்க வேண்டும் என்பதால் அந்த இடத்தைப் பிடிக்கிற அதிர்ஷ்டம் த்ரிஷாவுக்கும் அதிகம் இருக்கிறதாம். ஒத்த குத்துக்கு இத்தனை உள்குத்தா?
உண்மைக்குப் புறம்பான காட்சியமைப்புகளுடன் ரக்த சரித்ரா படத்தை எடுத்துள்ளதாகக் கூறி இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திரா ரவுடி பரிதாலா ரவி மற்றும் அவரைக் கொன்ற சூரி ஆகியோரின் உண்மையான கதையை ரக்த சரித்ரா எனும் பெயரில் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் எடுக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் பரிதாலா ரவி எனும் பாத்திரத்தில் இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். செப்டம்பர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்கிறார்கள். இந்த நிலையில் பரிதாலா ரவியின் கடும் விரோதியாகக் கருதப்படும் மறைந்த அரசியல் தலைவர் ஓபுல் ரெட்டி என்பவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தங்களின் அனுமதி மற்றும் ஆலோசனையின்றி ராம் கோபால் வர்மா இஷ்டத்துக்கும் இந்தப் படத்தை எடுத்துவிட்டதாகவும், ஓபுல் ரெட்டி பற்றி மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குற்றம் சாட்டியுள்ளனர். "இந்தப் படம் எடுப்பதற்கு முன்பு, பரிதாலா ரவி, ஓபுல் ரெட்டி குறித்த பல்வேறு சம்பவங்களை எங்களுடன் கலந்து பேசிய பிறகே எடுப்பதாக ராம் கோபால் வர்மா கூறியிருந்தார். ஆனால் அவர் ஒருமுறை கூட எங்களைச் சந்திக்கவில்லை. ரவி தொடர்புடைய பல நிகழ்வுகளின் உண்மையான பின்னணி என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ளக்கூட முயற்சிக்கவில்லை. நாங்களாகத் தொடர்பு கொண்டு அவற்றை அவருக்கு விளக்க முற்பட்டோம். ஆனால் அப்போதும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இந்தப் படத்தில் ஓபுல் ரெட்டியை மோசமாகச் சித்தரிக்கும் பல காட்சிகள் இருப்பதாக நாங்கள் அறிகிறோம். எனவே எங்களுக்கு இந்தப் படம் தொடர்பான அனைத்து விவரங்கள், காட்சிகளையும் தெரியப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது" என்று அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை, ஓபுல் ரெட்டியின் சகோதரிகள் உஷா ராணி, உமா ராணி பெயரில் அவர்களது வழக்கறிஞர் என்.ஆர்.கே.மோகன் அனுப்பியுள்ளார். ஏற்கெனவே இந்தப் படத்தை எடுத்துக் கொண்டிருந்த போது தனக்கு பரிதாலா ரவியின் நண்பர்களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக ராம் கோபால் வர்மா கூறியிருந்தது நினைவிருக்கலாம். வக்கீல் நோட்டீஸ் குறித்து ராம் கோபால் வர்மா கூறுகையில்: "இந்த மாதிரி மிரட்டல்கள் எனக்குப் புதிதல்ல. என் படத்தில் என்ன சொல்லியிருக்கிறேன் என்று தெரியாமலேயே என் மீது வழக்கு தொடுக்கிறார்கள். ஓபுல் ரெட்டியின் ஆவியே வந்து மிரட்டினாலும் நான் கவலைப்படப் போவதில்லை" என்றார். ஏற்கெனவே, இந்தப் படத்தை தென் மாநிலங்களில் வெளியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் இந்தப் படத்தின் போஸ்டர்கள் மற்றும் இதில் நடித்துள்ள கதாநாயகர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து, படத்தை வெளியிட விட மாட்டோம் என கூறியுள்ளனர் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இயக்கத்தினர். எத்தன ஆப்பு வச்சாலும் அதெல்லாம் நூடுல்ஸ் மாதிரி முழுங்கிடுவோம்ல்ல......
மீரா ஜாஸ்மினும், மாண்டலின் யு.ராஜேஷும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளவுள்ளனர். இதை ராஜேஷே உறுதிப்படுத்தியுள்ளார். இனியும் கல்யாணத்தை தாமதப்படுத்த விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். பிரபல மாண்டலின் கலைஞர் சீனிவாஸின் தம்பிதான் ராஜேஷ். இவரும் ஒரு மாண்டலின் கலைஞர்தான். இவரும், நடிகை மீரா ஜாஸ்மினும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் கல்யாணம் நடந்து விட்டதாக கூட சில காலத்திற்கு முன்பு செய்திகள் வெளியாகின. சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து இருவருமே வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் மீராவை விரைவில் மணக்கவிருப்பதாக ராஜேஷ் முதல் முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது திருமணம் இனியும் தாமதமாகாது. விரைவில் திருமணம் நடைபெறும். திருமணத்திற்குப் பிறகு நடிப்பதா, இல்லையா என்பதை மீராதான் முடிவு செய்ய வேண்டும். அதை நான் அவரிடமே விட்டு விட்டேன் என்றார். மீரா, ராஜேஷ் திருமணம் குறித்து சீனிவாஸ் கூறுகையில், இது தான் எதார்த்தம். இதை எங்களுடைய குடும்பம் ஏற்றுக் கொண்டுள்ளது, ராஜேஷின் முடிவை நாங்கள் மதிக்கிறோம் என்றார். இதன் மூலம் ராஜேஷ் குடும்பத்தில் திருமணம் தொடர்பாக சில சிக்கல்கள் இருந்து வந்ததாக கருதப்படுகிறது. தற்போது அவை நீங்கியிருப்பதால்தான் திருமணம் குறித்து ராஜேஷ் வெளிப்படையாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது. ராஜேஷ் ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மீரா ஜாஸ்மின் கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இசைக்குடும்பத்துல அடியெடுத்து வைக்கப்போறீங்க... ம்...மாண்டலின்கள் முழங்கட்டும்!