19 ஜுன், 2013. புதன்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » இந்தியா » 27 ஏப்ரல் 2012

இந்தியச்செய்திகள் : Latest India News

கலெக்டரை குறி வைத்து கடத்தியது ஏன்?: மாவோயிஸ்டுகள் விளக்கம்!

ராய்ப்பூர், ஏப். 27-
Collector abduction: Second round of talks on; Maoists explain kidnapping - India News Headlines in Tamil

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்ட ஆட்சியரான தமிழ்நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ்பால் மேனனை குறிவைத்து கடத்தியது ஏன் என்பது குறித்து மாவோயிஸ்டுகள் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாவோயிஸ்டு அமைப்பின் தென் பஸ்தான் பிராந்திய கமிட்டியின் செயலாளர் கணேஷ் உகியின் பெயரில் வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் பஸ்தார் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினரால் பழங்குடி மக்கள் எதிர்கொண்ட சித்தரவதைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அலெக்ஸ்பால் மேனன் ஆட்சியராகப் பொறுப்பேற்ற காலத்தில் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டோரின் பட்டியலையும் படுகொலை செய்யப்பட்டோர் விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழங்குடி மக்களை சித்ரவதை செய்த முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் கார்க்கு குடியரசுத் தலைவரின் விருது வழங்கப்பட்ட போதும்கூட அலெக்ஸ்பால் அமைதியாகவே இருந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் அந்த காவல்துறை கண்காணிப்பாளர் எத்தனை அப்பாவிகளை சித்தரவதைக்குள்ளாக்கினார் என்பது அலெக்ஸ்பால் மேனனுக்குத் தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக வங்கியின் ஆலோசனையின் பேரில் தொடங்கப்பட்டுள்ள கிராம் சுராஜ் திட்டத்தைக் கைவிடுமாறு ஏற்கெனவே தாங்கள் எச்சரித்திருந்த போதும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசாங்க நிர்வாகமானது அதை புறக்கணித்ததுடன் பஸ்தார் பிராந்தியத்தின் பெருமளவு இயற்கை கனிமவளத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கவும் முயற்சித்தனர் என்றும் மாவோயிஸ்டுகள் குறிப்பிட்டுள்ளனர்.

தண்டேவாடா சிறையில் 150 பேரைத்தான் அடைத்து வைக்க முடியும்... ஆனால் 700க்கும் மேற்பட்டோரை அடைத்து வைத்துள்ளனர். இதேபோல் மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பழங்குடி மக்களை சிறையில் அடைத்துள்ளனர் என்றும் மாவோயிஸ்டுகள் அதில் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கடத்தல் சம்பவங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால் தற்போது தங்களது கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகக் கூறி ஆட்சியரைக் கடத்தியிருப்பதற்கு மாவோயிஸ்டுகள் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Site Meter